கர்நாடக மாநிலத்தில் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக அணைகட்ட அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மேகதாது அணை திட்டத்தை மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து இந்த திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மேலும், இந்த திட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த முயன்று வரும் கர்நாடக அரசை எதிர்த்து, ஓசூர் அரீ விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மேகதாது நோக்கி பேரணி செல்லப்போவதாகப் போராட்டத்தை அறிவித்தனர்.
இதையடுத்து, விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராகக் கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ” காட்டியே தீருவோம்’ என அவர்கள் முழக்கமிட்டனர். மேலும், அவர்கள் தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்குச்செல்லும் பேருந்துகளையும் மறித்தனர்.
இவ்வாறு, இன்று (7-15-26) எல்லைகளிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதனால் இரு மாநில எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தின் காரணமாக, தமிழக பேருந்துகள் கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், கர்நாடக பேருந்துகள் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால், தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இருப்பினும், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை கர்நாடகாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
