சென்னை அசோக் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். ‘தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவை டார்கெட் செய்து ஆட்களை பிடித்து வருவதாகக் கூறப்படுவது குறித்து ‘ ” பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே கருத்துச் சொல்லவில்லை.
ஊடகவியலாளர்கள் அதிமுக பொதுச்செயலாளரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எங்களை போன்றவர்கள் இடத்தில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதேபோல அதிமுகவை முற்றாக முழுவதுமாக நாங்கள் எங்கள் கட்சியில் இணைப்போம் என்று தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் சொல்லப்படுகிறது என்றால் அவர்களையும் நீங்கள் இது சரியா? ஜனநாயகமா? அரசியல் அறமா? என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாமல் தவெகவும் இல்லாத அதிமுகவும் அல்லாத எங்களைப் போன்றவர்கள் இடத்தில் நீங்கள் எழுப்புகிற கேள்வி பொருத்தம் இல்லாததாகவே இருக்கிறது. தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவது உண்மையாக இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு அந்த அதிகாரம் இருந்தால் உடனடியாக தலையிட வேண்டும்” என்றார்.
